என்றோ விழுந்த விதை
இன்றைய மழையில் விழித்தது
நீரும் உரமும் இட்டோம்
நாளும் நாளும் இட்டோம்
பூத்துக் குலுங்கின மலர்கள்
கொத்து மலர்கள் எடுத்தேன்
முத்துச் சரமும் தொடுத்தேன்
கழுத்தில் இடம் இல்லை
எனவே
கைகளில் கொடுத்தேன்.
‘மகரந்தம் மூச்சை அடைக்கிறது.
நச்சு மலர்கள்; நலமற்றவை.
அழகு பார்க்கலாம்: அணிய முடியாது’
வீசி எறிந்தாய் தொட்டியில்
விழுந்ததோ என் மனம்.
இது காலங்களாய் வளர்ந்த தோட்டம்
இனிய கனவுகளால் மலர்ந்த தோற்றம்
வெட்டி எறிய மனமில்லை
பட்டுப் போகட்டும் என விட்டுவிட்டேன்.
இனி நீரில்லை, உரமில்லை.
மலர்களே என்னை மன்னித்துவிடுங்கள்.
* * * * * * * * *
இறைவா!
முட்டாளாக்கப்படுவது
எனக்குப் புதிதல்ல;
ஆனால்
உன்னாலுமா?
தூக்குமேடையில்
இறுதி ஆசை
இயலாததே என்றாலும்
கேட்பது ஒரு சம்பிரதாயம்.
சம்பிரதாயத்தை முடித்துக்கொண்டாய்
சடங்குகளை நிறைவேற்று.
Thursday, December 6, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment