Thursday, August 21, 2008

உனக்கும் எனக்கும்


இன்று

என் கனவுகளும்

கவலைகளும்

உன் காலடியில்

படையல்களாய்

ஆலிங்கனம் வேண்டி.

காலத்தில் வருவாய்;

கவலையில்லை.

ஆனாலும்

கதவைத் தட்டிக்கொண்டே இருப்பேன்

உன் உறக்கம் கலைக்க அல்ல

என் மயக்கம் விலக்க.

- - - - - - -

என்னைச் சுற்றி

ஏராளமாய்ப் பூதங்கள்.

விலக்கும் வழி,

உன்னை வேண்டுதல் அல்ல;

என்னைத் தோண்டுதல்.

- - - - - - -

சுற்றிச் சுற்றி வருகிறது

ஒரு ஈ

என்னுள்ளே இருக்கும்

ஒரு ஈயின் பிம்பமாக

ஆம்

இன்னும் நான்

அவ்வப்போது

மலங்களின் மீது.

- - - - - - -

வெண்ணை மலையில்

குடியிருப்பு

வீதியில் நெய்வேண்டிப்

பரிதவிப்பு.

- - - - - - - - -

அண்டத்தில் ஒரு தூசு

சூரியன்;

சூரியனில் ஒரு தூசு

பூமி;

பூமியில் ஒரு தூசு

இல்லம்.

உள்ளே முழு அண்டம்

உனக்காகக் காத்திருக்க

தூசுகளின் தூசு மீது

உள்ளம்.

- - - - - - -

More than a Blog Aggregator

No comments: